கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் பொன்னையராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பேக்கரி முன் மூட்டைகளுடன் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் அவர்கள் குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்த நடராஜன் (42), கோவை ஆர்.ஜி. வீதியைச் சேர்ந்த துல்டர் சிங் (39), மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் (55) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த 22 கிலோ 500 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.