கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே பட்டணம் புதூரில் நேற்று மின்சாரம் தாக்கி வனிஸ்ரீ (47) என்ற வீட்டுப் பணிப்பெண் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவைச் சேர்ந்த இவர் கடந்த ஆறு வருடங்களாக கோவையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 5-ம் தேதி உறவினர் வீட்டிற்குச் சென்று வருவதாக தாயாரிடம் தொலைபேசியில் கூறிய வனிஸ்ரீயை பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை.
சந்தேகமடைந்த தாய் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மாடிப்படி அருகே அவர் இறந்து கிடந்தார். சூலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குளித்துவிட்டு உடை மாற்றும் போது மாடிப்படி அருகே இருந்த எலக்ட்ரிக் ஹீட்டரில் எதிர்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் தாக்கி வனிஸ்ரீ உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.