கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன்(65). இவர் கிடைக்கும் கூலி வேலைகளை செய்து விட்டு சாலையோரம் உள்ள கடை முன்பு தினமும் தூங்குவது வழக்கம். இதேபோல், அவர் நேற்று முன்தினம் உக்கடம் சிஎம்சி காலனி பூமாரியம்மன் கோயில் பின்புறம் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் போதையில் மொய்தீனை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கீழே கிடந்த சிமெண்ட் சிலாப்பை தூக்கி மொய்தீனின் காலில் போட்டார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அவரை தாக்கியது தெற்கு உக்கடம் துப்புரவாளர் காலனியை சேர்ந்த ராஜேஷ்(40) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.