மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விளாமரத்தூர், நந்தவனப்புதூர், பூதப்பள்ளம், மேல்குறவன் கண்டி, கீழ்குறவன் கண்டி, எழுத்துக்கல்புதூர், அத்திக்கடவு, மானாறு, சொரண்டி, கூடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து மேட்டுப்பாளையம் வருவதற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து வசதிகளை இயக்க வேண்டும் என நீலகிரி எம்பி ஆ. ராசாவிடம் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லித்துறை வரை சென்று கொண்டிருந்த பேருந்தை விளாமரத்தூர் வரை நீட்டித்தும், அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை, தாயனூர், வெள்ளியங்காடு கூடப்பட்டி வரை சென்ற அரசு பேருந்தின் இயக்கத்தை மேல்குறவன் கண்டி வரை நீட்டித்து புதிய பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்த பேருந்துகளின் இயக்கத்தை இன்று நீலகிரி எம்பியும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான ஆ. ராசா இன்று காலை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து விளாமரத்தூருக்கு மாலை 4. 30 மணி அளவிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து மேல்குறவன் கண்டிக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.