கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, கணுவாய், தாலியூர், பன்னிமடை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தடாகம் அடுத்த தாலியூர் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை ஒன்று பழனிசாமி நாயக்கர் என்பவரது தோட்டத்தில் இருந்த வாழைமரங்களை நேற்று தின்று சேதப்படுத்தியுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் காம்பவுண்ட் சுவர் கேட்டுக்குள் தும்பிக்கையை நுழைத்து உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா எனத் தேடியுள்ளது. இந்த சம்பவங்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த காட்டு யானை குடியிருப்புக்குள் புகுந்து உணவு தேடும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாழைமரங்களை சேதப்படுத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதனால், அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.