கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட்டில் தினசரி பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் எம்ஜிஆர் மார்க்கெட்டில் நாசர் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவரின் கடைக்கு, 29. 500 கிலோ எடை கொண்ட சேனைக்கிழங்கை விவசாயி ஒருவர் விற்பனைக்கு கொண்டு வந்தார். இதனை அங்கிருந்து வியாபாரிகள் முதல்முறையாக, இதுபோன்ற எடை கொண்ட சேனைக்கிழங்கை பார்ப்பதாக கூறி வியப்பில் ஆழ்ந்தனர். இவ்வளவு எடை கொண்ட சேனைக்கிழங்கு விற்பனைக்கு வந்ததே இல்லை என்றும் தற்பொழுது வந்தது மிகப்பெரிய அதிசயம் என்றும் வியாபாரிகள் கூறியுள்ளனர். அங்கு வந்த பொதுமக்களும் சேனைக்கிழங்கை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினர்.