கோவை: மாணவர்களுடன் கேரம் விளையாண்ட ஆட்சியர்!

79பார்த்தது
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழக அரசின் முக்கிய திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் இரண்டாவது நாள் ஆய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேற்று மேற்கொண்டார்.
முதலில், மேட்டுப்பாளையம் நகராட்சியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த அவர், பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். தொடர்ந்து, 113 பயனாளிகளுக்கு ரூ. 77 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இரண்டாம் நாள் ஆய்வின்போது, ஆட்சியர் உழவர் சந்தை, கூட்டுறவு காலனி, நகராட்சி உரக்கிடங்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி சுதந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த அவர், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவருந்தினார்.
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களைப் பார்வையிட்ட அவர், மாணவர்களுடன் கேரம் விளையாடினார். ஆட்சியரின் இந்த நடவடிக்கைகள், அரசு திட்டங்கள் பொதுமக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதோடு, மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் நலனைக் கேட்டறிவதாக அமைந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி