கோவை சரவணம்பட்டி - துடியலூர் ரோடு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(28). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஐடி கம்பெனியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முத்துராமலிங்கம் அங்குள்ள சகாரா சிட்டி பழைய செக்யூரிட்டி கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரிடம் பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி அவர் அணிந்திருந்த கால் பவுன் தங்க மோதிரத்தை பறித்து தப்பி செல்ல முயன்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முத்துராமலிங்கம் கூச்சல் போட்டார். இதனையடுத்து அந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டி விடுவதாக மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடியது. இது குறித்து முத்துராமலிங்கம் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் அரிவாளை காட்டி மிரட்டி மோதிரம் பறித்தவர்கள் கோவை காமராஜபுரம் சங்கனூர் ரோட்டை சேர்ந்த அருள் குமரன்(22), கவுதம்(23), திவாகர்(23) மற்றும் ஹரிகந்த்(19) என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.