கோவை லாலி ரோடு அன்பகம் வீதியில் நேற்று வெறிநாய் கடித்ததில் யுவராஜ் மற்றும் சந்திரன் ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். சந்திரனுக்கு சொந்தமான இந்த நாய்க்கு முறையாக தடுப்பூசி போடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த யுவராஜ் லாலி ரோட்டில் நடந்து சென்றபோது நாயால் கடிக்கப்பட்டார். நாயை தடுக்க முயன்ற உரிமையாளர் சந்திரனையும் அந்த நாய் சரமாரியாக கடித்தது. படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹீமேம் அனிமல் சொசைட்டி விலங்குகள் நல அமைப்பினர் சம்பவ இடத்திற்கு வந்து நாயை பிடித்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த நாய் உயிரிழந்தது. உடற்கூறு ஆய்வில் நாய்க்கு ரேபிஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, லாலி ரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வளர்ப்பு பிராணிகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.