தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானை

68பார்த்தது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட காந்தவயல் பகுதியில் நேற்று இரவு ஒரு காட்டு யானை நுழைந்து விவசாய நிலங்களில் சேதம் விளைவித்தது. காந்தவயல் பகுதி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், அடிக்கடி காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

'பாகுபலி' என அழைக்கப்படும் ஒரு காட்டு யானை, நேற்று நேற்று (செப்.,27) இரவு விவசாயி சின்னராஜின் வாழைத் தோட்டத்தில் நுழைந்து, வாழை மரங்களை சேதப்படுத்தி, அவற்றை உண்டது. இச்சம்பவத்தை கண்ட சின்னராஜ் மற்றும் அருகிலுள்ள விவசாயிகள், உடனடியாக சிறுமுகை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினரும் விவசாயிகளும் இணைந்து, டார்ச் லைட்டுகளை பயன்படுத்தியும், சத்தங்களை எழுப்பியும் யானையை விரட்ட முயன்றனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த முயற்சிக்குப் பிறகு, காட்டு யானை பாகுபலியை வனப்பகுதிக்குள் விரட்டி விட முடிந்தது. இருப்பினும், பகுதி விவசாயிகள் தொடர்ந்து கவலை தெரிவித்துள்ளனர்.

யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி