அண்மையில் மதுரை ஆதீனம் தெரிவித்திருந்த கொலை முயற்சி புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோவையில் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுரை ஆதீனத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மதுரை ஆதீனம் பொய்யான தகவல்களை கூறி தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாகவும், அவர் மீது இதுவரை எந்த வழக்கும் பதியப்படாத நிலையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மதுரை ஆதீனம் தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த ஆர்ப்பாட்டம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.