கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மேலை நாடுகளுக்கு இணையாக நகரை அழகுபடுத்தும் வகையில், ரம்மியமான சூழல் குளக்கரைகள் சாலைகளில் எல். இ. டி விளக்குகள், லண்டன் க்ளாக் டவர், ரேஸ்கோர்ஸ் நடைபாதை, என பல்வேறு பணிகள் நடந்து முடிந்து உள்ளன. இதே போல கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஸ்கோர்ஸ்,
சுங்கம் ரவுண்டானா, போன்ற பகுதிகளில் குதிரை சிலை, உலக உருண்டை, தமிழ் பாரம்பரிய காளை மாடுகள் சிலை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் கோவை மாநகர காவல் துறையினர் நகரில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் சிக்னல்கள் இல்லாத ரவுண்டானாவை அமைத்து உள்ளனர். பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த ரவுண்டானாக்களை அழகுபடுத்தி தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன்,
வடகோவை சிந்தாமணி ரவுண்டானாவில் உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதற்கான திறப்பு விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய சிலையை திறந்து வைத்தனர்.
மரங்கள் நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மரமனிதன் சிலை உலக உருண்டையை தாங்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது, வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.