கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி (62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை (35) அணுகியுள்ளார். அப்போது, வாரிசு சான்றிதழ் வழங்க 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக கிருஷ்ணசாமி 1,000 ரூபாய் பணத்தை ஏற்கனவே வெற்றிவேலிடம் வழங்கியுள்ளார். மீதமுள்ள பணத்தை நேற்று தருவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அவரை புட்டுவிக்கி ரோட்டிற்கு வந்து பணத்தை தரும்படி கூறியுள்ளார். இதனிடையே கிருஷ்ணசாமி இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
ரசாயனம் தடவிய நோட்டுக்களுடன் கிருஷ்ணசாமி நேற்று சுண்டக்காமுத்தூர் சாலையில் உள்ள புட்டுவிக்கி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெற்றிவேலிடம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெற்றிவேலை பிடிக்க முயன்றனர்.
போலீசாரை கண்டதும் உஷாரான வெற்றிவேல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடினார். அவரை போலீசார் சினிமா பாணியில் துரத்தினர். போலீசார் துரத்தி வருவதை அறிந்த வெற்றிவேல் பேரூர் குளத்தேரி சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேரூர் குளத்தில் குதித்து, தான் வாங்கிய பணத்தையும் குளத்தில் வீசி எறிந்துள்ளார். அங்கிருந்து அவரைப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.