கோவை ஒப்பணக்கார வீதியில் நேற்று ஒருவழிப் பாதையில் இருசக்கர வாகனத்தில் வந்த வியாபாரி, எதிர்திசையில் வந்த டிப்பர் லாரியுடன் மோதி உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர் கேரளா மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்த முஸ்தபா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பட்டாம்பியில் டீக்கடை நடத்தி வந்தார். தனது கடைக்குத் தேவையான பொருட்களை கோவையில் இருந்து மொத்தமாக வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வழக்கம்போல கடைப் பொருட்களை வாங்க வந்த முஸ்தபா, ஒருவழிப் பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டிப்பர் லாரியுடன் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்த தகவல் அறிந்த போக்குவரத்துப் பிரிவு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.