கோவை, மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் காலை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்து உள்ளது. வலுக்குப்பாறை அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்த பத்மா (56) என்ற பெண், எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பத்மா, நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதாகக் கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். ஆனால் அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. மாறாக, அவரது வீடு இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள குப்பை எரிக்கும் இடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். அவரது உடல் எரிந்த நிலையில் இருந்ததால், அவரது உடல் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்மா வீட்டில் இருந்து, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் கிளம்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.