கோவை: 3வது நாளாக விசைத்தறியாளர்கள் போராட்டம்!

51பார்த்தது
கோவை, திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது. மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, தொழிலாளர் கூலி உயர்வு மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 10, 000-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவையில் விதியின் 55-ன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் குறித்து பேரவையில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர். கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் விவாதிப்பதற்காக கவன ஈர்ப்பு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அதற்கான மனுவை சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் கொடுத்துள்ளனர்.
மூன்றாவது நாளாக தொடரும் விசைத்தறியாளர்களின் போராட்டத்தினால், 80 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி