கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஒரு குழு பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று மனு அளித்தனர். அவர்கள் உடனடியாக கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு பள்ளிகளில் 3197 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தேர்ச்சி அடைந்த நிலையிலும், இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
ஆனால், எங்களுடன் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் ஏற்கனவே பணியில் சேர்ந்துவிட்டனர் என்று மனுதாரர்கள் தெரிவித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி, விரைவில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.