கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு வனத்துறை கோவை வனப்பிரிவுடன் இணைந்து, நேற்று மனித - விலங்கு மோதலுக்கான புதுமையான தீர்வுகள் என்ற தலைப்பில் 36 மணி நேர ஹேக்கத்தான் நடைபெற்றது. கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதிஷ் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார்.
ஹேக்கத்தானின் நோக்கம்: யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் உணவு மற்றும் தங்குமிடம் தேடி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளைத் தடுக்க, தொழில்நுட்பம் சார்ந்த புதுமையான தீர்வுகளை உருவாக்குவதே இந்த ஹேக்கத்தானின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலிருந்து 170 அணிகள் இந்த ஹேக்கத்தானில் பங்கேற்று, பல்வேறு புதுமையான தீர்வுகளை முன்வைத்தனர். அவற்றில் 21 அணிகள் 36 மணி நேர இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்கள் தீர்வுகளைச் சமர்ப்பித்தனர். ரூட்ஸ் நிறுவனத்தின் மூத்த பொதுமேலாளர் சம்பத்குமார் மற்றும் விஸ்டேன் நிறுவனத்தின் குளோபல் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் லீடர் புருஷோத்தமன் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்று, சிறந்த தீர்வுகளைத் தேர்ந்தெடுத்தனர்.