கோட்டைமேட்டில் அமைந்துள்ள பழமையான அகிலாண்டேஸ்வரி உடனமர் சங்கமேஸ்வரர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, கடந்த மே 4-ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற தேரோட்டத்தை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கௌமார மடாலயம் சிறை ஆதீனம் குமரகுருபர சாமிகள் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து வழிபட்டனர்.
தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு பெருமாள் கோவில் வீதி, ஒப்பனக்கார வீதி, மாநகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.