கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலை 4 மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை 6 மடங்கு உயர்ந்தது. இதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ. 2,600ல் இருந்து ரூ. 3000க்கும், ஐஸ் மல்லி ரூ. 2,500ல் இருந்து ரூ. 2,800க்கும், முல்லை ரூ. 1,100ல் இருந்து ரூ. 2,500க்கும், ஜாதி மல்லி ரூ. 900ல் இருந்து ரூ. 2,500க்கும், கனகாம்பரம் ரூ. 1000ல் இருந்து ரூ. 2000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், அரளி பூ ரூ. 200ல் இருந்து ரூ. 500க்கும், சாமந்தி ரூ. 100ல் இருந்து ரூ. 160க்கும், சம்பங்கி ரூ. 190ல் இருந்து ரூ. 230க்கும், பன்னீர் ரோஜ் ரூ. 140ல் இருந்து ரூ. 200க்கும், சாக்லேட் ரோஜ் ரூ. 180ல் இருந்து ரூ. 260க்கும் விற்பனை செய்யப்பட்டது.