சென்னை வில்லிவாக்கம், பாரதி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (51). இவர் வில்லிவாக்கம் சிட்கோ நகர், 1-வது மெயின் ரோட்டில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 17.3.2025-ம் தேதி இவரின் அடகு கடைக்கு பாஸ்கர் (61) என்பவர் வந்து 38.5 கிராம் எடையுள்ள 2 தங்க வளையல்கள், விநாயகர் டாலரை அடகு வைத்திருக்கிறார்.
அப்போது பாஸ்கர் கொடுத்த தங்க நகைகளை வெங்கடேசன் பரிசோதித்திருக்கிறார். அப்போது அவைகள் போலி எனத் தெரியவந்திருக்கிறது. உடனே போலி தங்க நகைகளை அடகு வைத்து ஏமாற்ற வந்திருந்த பாஸ்கர் குறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்கு வெங்கடேசன் ரகசியமாக போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த போலீஸார், தங்க நகைகளை அடகு வைக்க வந்த பாஸ்கரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
அவரிடம் விசாரித்தபோது ஏற்கெனவே 11 தடவை வெங்கடேசன் அடகு கடையில் போலி தங்க நகைகளை அடகு வைத்து 12,21,000 ரூபாயை வாங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வில்லிவாக்கம், செங்குன்றம் ரோடு, 2-வது குறுக்குத் தெருவில் வசிக்கும் பாஸ்கரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 245 கிராம் எடையுள்ள போலி தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.