பஞ்சாபில் சிக்கி தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் தமிழ்நாடு அரசின் உதவியால் பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மாணவர்கள், தமிழ்நாடு அரசு உதவியுடன் நேற்று டெல்லி அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து முதல் கட்டமாக 5 மாணவர்கள் விமானம் மூலம், டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை புறப்பட்டனர். டெல்லியில் உள்ள மற்ற ஏழு மாணவர்களும் மதியம் 12 மணியளவில் டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்படுகின்றனர். இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட 5 மாணவர்கள், சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
5 மாணவர்களையும் அயலகத் தமிழர் நலத் துறை துணை இயக்குநர் (பொறுப்பு) புகழேந்தி தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனர். இதனிடையே, மாணவர்கள் சென்னையில் இருந்து அவர்களது சொந்த ஊர் செல்ல அரசு சார்பில் சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை, நாமக்கல்லை சேர்ந்த அந்த மாணவர்கள் 5 பேரும் பேருந்து மூலம் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.