சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, மாங்காடு பகுதியை சேர்ந்த அகமது மாஹீர் (21) என்பவருடன் பழகி காதலித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் மாஹீர் அப்பெண்ணை தொடர்பு கொண்டு, ரூ. 1 லட்சம் பணத்துடன், ஆப்பிள் ஐபோனும் தனக்கு வாங்கித் தர வேண்டும், இல்லையென்றால் முன்பு பழகியபோது எடுத்த வீடியோக்களை அவரது உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டினார். இதுகுறித்து அப்பெண் வானகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் பாரதிய தண்டனை சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் 21 வயது பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மாஹீரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய ஆப்பிள் ஐபோன் ஒன்றையும் போலீஸார் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மாஹீர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.