திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதி மட்டும் நிலுவையில் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக எம். பி ஆ. ராசா பதிலளித்துள்ளார்.
சென்னையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம். பியுமான ஆ. ராசா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதி மட்டும் நிலுவையில் உள்ளது. ஆனால் அதற்கும் ஒரு குழு அமைத்துள்ளார் முதல்வர். வாக்குறுதிகளில் சொல்லாத பலவற்றை இந்த அரசு செய்துள்ளது. எங்கு விவாதத்தை வைத்தாலும் நான் வரத் தயார். ஆனால் இந்தியில் மட்டும் பேசக்கூடாது. மத்திய நிதி ஒதுக்க வேண்டிய எய்ம்ஸுக்காக இன்னமும் மாநில அரசு காத்துக்கொண்டுள்ளது.
அமித் ஷா, மோடி ஆகியோரை பார்த்து எல்லாம் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்களுக்கு பின்னால் ஒரு சித்தாந்தம் ஒளிந்துகொண்டு மற்ற இடங்களில் வெற்றி பெறுகிறது. ஆனால் இங்கு அதனால் வெற்றி பெற முடியாததற்கு காரணம் எங்களிடம் அதற்கான மாற்று சித்தாந்தம் உள்ளது. திராவிட இயக்க சித்தாந்தம் இருக்கும் வரை அவர்களால் இங்கு ஆட்சிக்கு வர முடியாது. நாங்கள் டெல்லியோ, ஹரியானாவோ, மகாராஷ்டிராவோ அல்ல, நாங்கள் தமிழ்நாடு என்று தெரிவித்தார்.