பட்டாசு ஆலை விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்

67பார்த்தது
பட்டாசு ஆலை விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியான இருவரது குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி வட்டம், காளையார்குறிச்சி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை 9. 15 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (45) மற்றும் முத்துமுருகன் (45) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எம். புதுப்பட்டியைச் சேர்ந்த சங்கரவேல் (52) மற்றும் சரோஜா (50) ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி