காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச. 14) காலை காலமானார். அவருக்கு வயது 75.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் இன்று காலை 10. 12 மணியளவில் பிரிந்தது என்று சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.
அவரது மறைவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு பேரிழப்பு. கட்சியில் தன்மானத் தலைவராக திகழ்ந்தவர். எதையும் அச்சமில்லாமல் எதிர்கொள்வார். வெளிப்படையாகப் பேசுபவர். அவரது இழப்பு அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கு ஈடு செய்ய முடியாது இழப்பு என்றார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த அவரது மகன் திருமகன் உயிரிழந்த நிலையில் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.