இதயத்தின் பெரிய ரத்தக்குழாயில் 100% அடைப்பு ஏற்பட்ட வழக்கறிஞருக்கு கிண்டி கலைஞர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்தவர் எம். ஸ்டாலின் மணி மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். நெஞ்சுவலி ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில், இதயத்தின் பெரிய ரத்தக்குழாயான இடது புறம் இருக்கும் ரத்தக்குழாயில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, உடனே சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஸ்டாலின் மணி சேர்க்கப்பட்டார். அங்கு ரத்தக்குழாய் அடைப்புக்கு‘ஸ்டென்ட்’ பொருத்தி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நண்பரின் உதவியுடன் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வந்த அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 20 நாட்களுக்கு மாத்திரைகளை கொடுத்தனர். 20 நாள் கழித்து ஸ்டாலின் மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலது தொடை பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வழியாக ‘ஸ்டென்ட்’ கொண்டு சென்று இதய ரத்தக்குழாயில் பொருத்தி அடைப்பை சரிசெய்தனர்.
சிகிச்சைக்கு பின்னர் பூரணமாக குணமடைந்த ஸ்டாலின் மணி, தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, இதயவியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜி. தர்மராஜ் ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.