பல்லாவரம் பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்து 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் குடிநீரை ஆய்வு செய்ததில் அதில் இரண்டு வகையான பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது, கடந்த டிசம்பர் 5ம் தேதி, சென்னை பல்லாவரத்தில், குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், மூன்று பேர் உயிரிழந்ததும், 20க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுமான துயர சம்பவம் நடந்தது. அமைச்சர் தா. மோ. அன்பரசன், குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்றும், மக்களின் தவறால்தான் பாதிப்பு ஏற்பட்டதாக, பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தினார்.
குடிநீரில், 'கோலிஃபார்ம் மற்றும் ஈ கோலி', ஆகிய பாக்டீரியாக்கள் இருக்கக்கூடாது என்பது, சென்னைப் பெருநகர குடிநீர் வாரியத்தின் தரக் கட்டுப்பாடுகளில் ஒன்று. ஆனால் பல்லாவரம் பகுதியில் வழங்கப்பட்ட குடிநீரில் இந்த இரண்டு பாக்டீரியாக்களும் இருப்பது சோதனை முடிவில் வெளிப்பட்டுள்ளது. அடிப்படை சோதனைகளைக்கூட மேற்கொள்ளாமல், தங்கள் நிர்வாகத் தோல்வியை, தவறுகளை மறைத்து, அதிகாரத் திமிரின் உச்சத்தில், பொதுமக்களைக் குற்றவாளியாக்க முயன்ற அமைச்சர் தா. மோ. அன்பரசன், குடிநீரில் கழிவுநீர் கலந்ததன் காரணமாகப் பறிபோன மூன்று உயிர்களுக்கு என்ன பதில் கூறுவார்? என அவர் கூறியிருக்கிறார்.