பகுஜன் சமாஜ் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி விடுவிக்கப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், 52. சென்னை பெரம்பூரில், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.
கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது, பகுஜன் சமாஜ் கட்சியின் மேலிடப் பிரதிநிதிகளை, பொற்கொடி 500க்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் ஒன்றுதிரண்டு நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மாநில தலைவராக உள்ள ஆனந்தன், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆவேசமாக புகார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது, ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி விடுவிக்கப்பட்டார். தமிழக மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.