சென்னை: ராணுவத்துக்கு ஆதரவாக ஸ்டாலின் தலைமையில் தேசியக் கொடி பேரணி

71பார்த்தது
சென்னை: ராணுவத்துக்கு ஆதரவாக ஸ்டாலின் தலைமையில் தேசியக் கொடி பேரணி
இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில், சென்னையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 

பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் எதிராக வீரத்துடன் போர் புரிந்துவரும் இந்திய ராணுவத்துக்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமை உணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் பேரணி நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகில் இருந்து முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தீவுத்திடல் அருகே அமைந்துள்ள போர் நினைவுச் சின்னம் நோக்கி, பேரணி துவங்கியது. 

இந்தப் பேரணியில் முன்னாள் ராணுவ வீரர்கள், சர்வ மத பிரதிநிதிகள், அமைச்சர்கள், திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தமிழக காவல் துறையின் ஆயுதப்படை, சிறப்பு கமாண்டோ படை வீரர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி