சென்னை திருவான்மியூரில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரியை காரில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 26). இவர், சென்னை திருவான்மியூர் கிழக்கு மாதா தெருவில் இயங்கி வரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னை காரில் 3 பேர் கடத்தி செல்வதாக நிறுவனத்தின் மேலாளருக்கு செல்போனில் பதறியபடி தகவல் தெரிவித்தார்.
உடனே அவர், திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் இன்சூரன்ஸ் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் இருந்து அவர் கடத்தப்பட்டது தெரிய வந்தது. ஆனந்தின் செல்போன் எண் மூலம் அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்து அவரை மீட்டனர்.
ஆனந்தை கடத்தி சென்ற குரோம்பேட்டை வ. உ. சி. நகரை சேர்ந்த பார்த்திபன் (34), கோவிலம்பாக்கம் எஸ். கொளத்தூர் இந்திரபுரி 5-வது தெருவை சேர்ந்த கோதண்டராமன் (33), குரோம்பேட்டை அத்திவரதர் காலனி 2-வது தெருவை சேர்ந்த நடராஜ் (34) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.