டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, எந்த முதல் தகவல் அறிக்கையின்படி சோதனை நடத்தப்பட்டதோ, அதை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்ரமணியம், கே. ராஜசேகர் அமர்வில் இன்று (ஏப். 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு மாநில அரசு அமலாக்கத் துறைக்கு உதவலாமா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு தலைமை வழக்கறிஞர், சட்டத்தை மீறி அமலாக்கத் துறை இவ்வளவு செய்த பிறகு எப்படி உதவ முடியும்? அமலாக்கத் துறையின் சோதனை நடந்து கொண்டிருந்த போதே, டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி என ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பேட்டியளித்தார். அதற்கு என்ன அர்த்தம்? என்று கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, எந்த முதல் தகவல் அறிக்கையின்படி சோதனை நடத்தப்பட்டதோ, அதை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை புதன்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.