திருவொற்றியூர் சாத்துமா நகரை சேர்ந்தவர் ரமணி (37). இவரது கணவர் தேவேந்திரன். இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும் காயத்ரி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கணவரிடம் இருந்து பிரிந்து வசித்து வந்த ரமணி விக்னேஷ் (31) என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே காயத்ரி புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த சாரதி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் இந்த திருமணத்தில் ரமணிக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக கடும் விரக்தியில் இருந்து வந்த ரமணி நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார் ரமணி உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.