சென்னை துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் ரூ. 8 ஆயிரம் கோடியில் புதிய முனையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார். தென்னிந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் இந்திய மல்டி மோடல் போக்குவரத்து ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் தென்னிந்திய கப்பல் போக்குவரத்து 6-வது மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. சென்னை துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால் மாநாட்டை தொடங்கி வைத்து, 'மாநில தளவாடங்களின் நிலை மற்றும் துறை ரீதியான டிஜிட்டல் மாற்றம்' குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது, நம் துறைமுகங்களில் முன்பு வெளிநாடுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (விடிஎம்எஸ்) பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை ஐஐடி தயாரித்த விடிஎம்எஸ் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை சென்னை, காமராஜர், தூத்துக்குடி துறைமுகங்களில் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல் ரூ. 120 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, கார்பன் வெளியேற்றத்தை கணிசமாக குறைக்கும் வகையில் பசுமை இழுவைப் படகுகளை சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவர உள்ளோம் என கூறினார்.