பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உயர் நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணையமைச்சரான ஷோபா கரந்த்லாஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஷோபா கரந்த்லாஜே மீது மதுரை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா கரந்த்லாஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் மனுதாரருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதி, அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தமிழகத்தில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது அவருக்கு முன்னதாகவே தெரிந்திருக்கும் பட்சத்தில், பொறுப்புள்ளவராக முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் அளித்து இருக்கலாமே? என கேள்வி எழுப்பி, வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.