கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓட்டுநராக வேலைபார்த்து வந்தவர் மாரடைப்பால் மரணமடைந்தார். புதுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவர் கிண்டி, கவர்னர் மாளிகையில் கடந்த 30 ஆண்டுகளாக கார் ஓட்டுனராக பணிபுரிந்து, அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 13) காலை, வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்ற வெங்கடேசன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை தூக்கிக் கொண்டு அதே வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு வெங்கடேசனை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த கிண்டி போலீசார், அவரது உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்