தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, மேலக்கரந்தை கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, மேலக்கரந்தை கிராமம், பொன்வேல் பெட்ரோல் பங்க் எதிரில் இன்று அதிகாலை திருப்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு TN38 BH 5794 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்றின் ஓட்டுநர் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பின்புறத்திலிருந்து வந்த கண்டைனர் லாரி மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 5 நபர்களில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், அலங்கியம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், செல்வராஜ் மற்றும் விக்னேஷ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜ்குமார் மற்றும் மகேஷ் குமார் ஆகிய இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.