சென்னையின் நான்காவது மலர் காட்சியை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நான்காவது சென்னை மலர் காட்சி ஜனவரி 2023-ல் செம்மொழிப் பூங்காவில் நடைபெறுகிறது. இதில் பெட்டுனியா, சால்வியா, செவ்வந்தி, ரோஜா, பெகோனியா, ஆந்தூரியம், பெண்டாஸ், சாமந்தி, டயாந்தஸ், சினியா, டொரினியா, கேலண்டுலா, கோழிக்கொண்டை, வாடாமல்லி, பான்ஸி, டெல்ஃபினியம், பால்சம், ஹைட்ராஞ்சியா, பாய்ன்செட்டியா போன்ற 50-க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி வகைகளுடன் அலங்கரிக்கப்பட்ட யானை, பட்டாம் பூச்சி, ரயில் பெட்டி, கப்பல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வடிவங்கள் இடம்பெற்றுள்ளது. இச்சிறப்புமிக்க மலர் காட்சியை தமிழக முதல்வர் இன்றையதினம் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
பின்னர், பூங்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட்டார். தொடர்ந்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாண்புமிகு முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இம்மலர்காட்சி ஜன. 2-ம் தேதியான இன்றையதினம் தொடங்கி ஜன. 18 வரை நடைபெற உள்ளது. செம்மொழி பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுச்சீட்டு வழங்கப்படும். மேலும் https://tnhorticulture.in/spetickets/ என்ற இணையதளம் வாயிலாகவும் நுழைவுச்சீட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.