கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை மீண்டும் ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மே மாதங்களில் வாட்டி வதைத்த கடும் வெயிலானது ஜூன் தொடக்கத்தில் இருந்து சற்றே குறைந்து ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இன்று வரை தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கிலோ ரூ. 50 ஆக உயர்ந்தது.
இடையில் மழை சற்று விடைவெளி விட்ட நிலையில், தக்காளி விலை கிலோ ரூ. 27 ஆக குறைந்தது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகம் மற்றும் ஆந்திர எல்லையோர பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மீண்டும் தக்காளி விலை இன்று கிலோ ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது. கேரட்டும் கிலோ ரூ. 30-லிருந்து ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது. மே இறுதி வாரத்தில் கிலோ ரூ. 120-க்கு விற்கப்பட்டு வந்த பீன்ஸ், இன்று கிலோ ரூ. 70 ஆக குறைந்துள்ளது.
மற்ற காய்கறிகளான பச்சை மிளகாய் ரூ. 65, நூக்கல் ரூ. 50, சாம்பார் வெங்காயம் ரூ. 40, பாகற்காய் ரூ. 30, உருளைக்கிழங்கு ரூ. 28, முள்ளங்கி, பீட்ரூட் தலா ரூ. 25, பெரிய வெங்காயம் ரூ. 24, முருங்கைக்காய், வெண்டைக்காய் தலா ரூ. 20, புடலங்காய் ரூ. 15, முட்டைக்கோஸ் ரூ. 12, கத்தரிக்காய் ரூ. 10 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.