உலகையே அச்சுறுத்திய தொற்றுநோய் கரோனாவையே விரட்டியடித்த சென்னை மாநகரில் நீரிழிவு, இதய நோய்கள் போன்றதொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து பெரும் சவாலாக இருந்து வருகிறது.
உடல் உழைப்பு குறைந்ததால், இந்த தொற்றா நோய்கள் அழையாத விருந்தாளியாக உடலுக்கு வந்து சேர்ந்துவிடுகின்றன. எனவே இதற்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வாக அமைகிறது. அதிலும் நடைபயிற்சி முக்கியமாகும். ஆனால் அதற்கு ஏற்ற பொது இடங்கள் மற்றும் விளையாட்டு திடல்களின் எண்ணிக்கை சென்னையில் குறைவாகவே உள்ளன.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் மொத்தம் 210 விளையாட்டு திடல்களை பராமரித்து வருகிறது. அதில் 14 திடல்கள் நட்சத்திர விளையாட்டு திடல்களாக உள்ளன. இதில் தேனாம்பேட்டை மண்டலம், 111-வது வார்டு கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு திடலும் ஒன்று. 17, 658 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
இது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கட்டுமானக் கழிவுகளை கொட்டுமிடமாக மாநகராட்சி மாற்றியுள்ளது. இதனால் தினமும் திடலை பயன்படுத்தி வரும் இளைஞர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.