போர் பதற்றம் காரணமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி முடித்த 514 ஊர்க்காவல் படையினர் சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைக்கும் நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டார். அவருக்கு ஊர்க்காவல் படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, போர் பதற்றம் காரணமாக மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரித்துள்ளோம்.
அதேபோல் கண்காணிப்பையும் அதிகரித்து இருக்கிறோம். எந்தெந்த இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டுமோ, அந்த இடங்களில் உளவுத்துறை மற்றும் காவல்துறையும் இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறது. மேலும் திரையரங்கம், வணிக வளாகங்கள், கோயில்கள், கடற்கரை என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் வாகன சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.