மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இருந்திருந்தால், அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது யதார்த்தமான உண்மை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி நீடித்திருந்தால் நிறைய இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி பேசியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது உண்மைதான். யதார்த்தமான உண்மை. அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், இன்றைக்கு திமுகவுக்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்பது கணக்கு ரீதியாக உண்மை.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், கூட்டணி என்பது ஓர் அரசியல் வியூகம். அந்த வியூகத்தை அதிமுகவினர், தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் பயன்படுத்தி உள்ளனர். எனவே, இது ஒரு கணக்குதான். இந்த யதார்த்தமான உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.