கே. கே. நகர், கே. கே. நகரில் சாலை மற்றும் நடைபாதையில், கைவிடப்பட்ட மற்றும் நீண்ட நாட்களாக ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த 22 வாகனங்களை, மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
கோடம்பாக்கம் மண்டலம், 136 வது வார்டு, கே. கே. நகரில் சாலையோரம் மற்றும் நடைபாதைகளில், நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்களை அகற்றும் பணியில் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதில், ராஜமன்னார் சாலை, பி. டி. ராஜன் சாலை, ஜீவானந்தம் சாலை உள்ளிட்ட சாலைகளில் இருந்து, 22 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, லாரியில் ஏற்றி செனாய்நகரில் உள்ள மாநகராட்சி மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
கே. கே. நகர் சிவன் பூங்கா முன், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை அப்புறப்படுத்தும் படி பகுதிவாசிகள் தொடர் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த வாகனங்கள் அகற்றப்படவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'நடைபாதை மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றி வருகிறோம்.
விபத்து, குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்களும், மாநகராட்சி நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை அகற்ற போலீசார் முன்வரவில்லை' என்றனர்.