சென்னை: மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

54பார்த்தது
சென்னை: மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
மத்திய கைலாஷ் பகுதியில் (டிசம்பர் 22) முதல் போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், மத்திய கைலாஷ் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக சோதனை ஓட்டம் அடிப்படையில் இன்று (22ம் தேதி) முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அமுல்படுத்தப்படும். அடையாறில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பில் ஓ.எம்.ஆர் சாலை நோக்கி திருப்பி விடப்படும்.

அந்த வாகனங்கள் 400 மீட்டர் தூரம் சென்று தரமணி சி.பி.டி பாலிடெக்னிக் கல்லூரியின் முன்புறம் 'U' திருப்பம் அனுமதிக்கப்பட்டு, மத்திய கைலாஷ் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடைய அனுமதிக்கப்படும். கிண்டியில் இருந்து அடையாறு மற்றும் ஓ.எம்.ஆர் நோக்கி வரும் வாகனங்கள் தற்போது போலவே எந்த மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

ஓ.எம்.ஆர்-ல் இருந்து கிண்டி நோக்கி வரும் மாநகர பேருந்துகள் மத்திய கைலாஷ் கோயிலின் பின்புறத்தில் நியமிக்கப்பட்ட தனிப்பாதையில் பயணிகளை இறக்கிவிட அனுமதிக்கப்படும். இந்த போக்குவரத்து மாற்றமானது மத்திய கைலாஷ் சந்திப்பில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதோடு, சீரான போக்குவரத்தையும் ஏற்படுத்த வழிவகை செய்யும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி