சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியதின் பேரில் தமிழக பாஜக சார்பில் இன்று நடைபெற இருந்த வாஜ்பாய் பிறந்தநாள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக சார்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.