அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வெளிநபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடையதாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கில் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து யார் அந்த சார்? என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் முன்வைத்து, மாணவிக்கு நீதி கிடைக்க கோரி தீவிர போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் ஒருபகுதியாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேரவைக்கு கருப்பு சட்டை மற்றும் யார் அந்த சார்? என்ற பேட்ஜை அணிந்து அதிமுக உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். இதற்கிடையே அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக நிர்வாகி சுதாகர் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக பேரவைக்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் இவர் தான் அந்த சார் என்ற பதாகைகளை எடுத்து வந்து பேரவை வளாகத்தில் முழக்கங்களை எழுப்பினர்.