சென்னை: மாவட்ட நீதிமன்றங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

57பார்த்தது
சென்னை: மாவட்ட நீதிமன்றங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்ற இளைஞரை நீதிமன்ற வாயிலில் வைத்து 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிப்படுகொலை செய்தது. இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 21) மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே. ரவீந்திரன் மற்றும் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் சீலிட்ட அறிக்கையை தாக்கல் செய்தனர். 

அப்போது நீதிபதிகள் கூறியதாவது, இந்த கொலை சம்பவம் நடந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்து தவறிழைத்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் மீது நெல்லை காவல் ஆணையர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் வரை இடைக்காலமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் தேவையான ஆயுதம் தாங்கிய போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜன. 7-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி