ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பம்: ஐகோர்ட் ஆணை

59பார்த்தது
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பம்: ஐகோர்ட் ஆணை
தமிழகம் முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு வரும் அக். 6-ம் தேதியன்று ஆர்எஸ்எஸ் சார்பில் 58 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர்கள் ஜி. ராஜகோபாலன், என். எல். ராஜா, ஜி. கார்த்திகேயன், வழக்கறிஞர் ஆர். சி. பால்கனகராஜ் ஆகியோர், கடந்தாண்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் அமைதியாக நடத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு போலீஸார் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான காரணத்தைக் கூறி அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர் என வாதிட்டனர்.

அதற்கு காவல்துறை தரப்பில், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் பல தகவல்கள் இல்லை என்பதால் அவை நிராகரி்க்கப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, ‘ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரும் முழுமையான மனுக்களை இன்று மீண்டும் போலீஸாரிடம் அளிக்க வேண்டும். அந்த மனுக்களை போலீஸார் நாளைக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப். 30-க்கு தள்ளிவைத்தார்.

தொடர்புடைய செய்தி