சென்னை: இளம்பெண் காதல் விவகாரத்தில் சினிமா உதவி இயக்குனரை கடத்திய வழக்கில் குண்டர் சட்டத்தில் தொழிலதிபர் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமாரன்(22). இவரை இளம்பெண் காதல் விவகாரத்தில் ஒரு கும்பல் கடத்திச்சென்று சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து தாக்கிவிட்டு தப்பினர்.
இதுசம்பந்தமாக அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். இதில், சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகர்(33), ஆதித்யா(21), கார்த்திகேயன்(25), அகஸ்டின்(21) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் டேனியல்(42), இவரது நண்பர் பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி(35) ஆகியோர்தான் உதவி இயக்குனரை கடத்தினர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தொழிலதிபர் டேனியல் உள்பட 5 பேரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.