நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தலைவிரித்தாடி வரும் நிலையில், அவுரங்கசீப் கல்லறையை இடித்து அகற்ற வேண்டிய தேவை என்ன இருக்கிறது? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவது, தாக்குவது, கொலை செய்வது போன்றவற்றையே தனது முழு நேர பணியாக கொண்டு காவி பயங்கரவாத கும்பல் நாடு முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மத வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஓடிவிட்டன. இருந்தும் அன்று இஸ்லாமிய மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட அச்சம், தற்போது முன்பைக் காட்டிலும் மேலோங்கியுள்ளது. அரசியல் ஒழுக்கமும் இல்லை; ஆன்மிக ஒழுக்கமும் இல்லாத பாஜக அரசு, இஸ்லாமிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தி, அடுத்தடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களை மூலமாக, இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை நிறுவி விடலாம் என எண்ணுகிறது.
எனவே, ஒன்றியத்தில் உள்ள இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதோடு, நாட்டின் மதசார்பின்மைக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல்களுக்கு தக்க பதிலடி கொடுக்க, ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.